இறுதிக்கு முன்னேறியது பஞ்சாப்

புதுடெல்லி: ஜூன் 2-
ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் கிங்ஸ் அணி.ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் தகுதி சுற்று 2 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் மூலம் முதலில் பேட்டிங் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ரோஹித் சர்மா, ஜானி பேர்ஸ்டோ இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ரோஹில் எட்டு ரன்களில் வைஷாக் விஜய்குமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மறுமுனையில் ஆடிய பேர்ஸ்டோ 38 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் கூட்டணி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் 44 ரன்கள் விளாசி வெளியேறினர். ஹர்திக் பாண்டியா 15, நமன் தீர் 37, ராஜ் பாவா 8 என 20 ஓவர் முடிவில் 203 ரன்கள் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.
204 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியின் ஓப்பனிங் வீரர் ப்ரியான்ஷ் ஆர்யா 20 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் ஆடிய ப்ரப்சிம்ரன் சிங் 6 ரன்களின் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஜோஷ் இங்லிஸ் 38 ரன்கள் அடித்து ஆடினார். தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 8 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் விளாசினார். நேஹல் வதேரா 48 ரன்கள், ஷஷாங் சிங் 2 ரன்கள் எடுத்தனர். ஸ்ரேயஸ் ஐயர் அடித்த அடுத்தடுத்த சிக்ஸர்களில் 19 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டி பஞ்சாப் வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பையை வெளியேற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதன் மூலம் நாளை (ஜூன் 3) நடக்கும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியை பஞ்சாப் எதிர்கொள்கிறது. இதன் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் அணி இறுதிப் போட்டியில் நுழைகிறது.