
நார்தாம்ப்டன், ஜூன் 9- இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த பயிற்சிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா ‘ஏ’ அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் அதிரடியாக ஆடினார். 92 பந்துகளில் அவர் 80 ரன்கள் சேர்த்தார். முதல் போட்டியிலும் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அரை சதம் அடித்திருந்தார். இதை அடுத்து, இரண்டு போட்டிகளின் இரண்டாவது இன்னிங்ஸிலும் அவர் அரை சதம் அடித்திருக்கிறார். அதே சமயம், முதலில் சரியாகப் பங்களிக்கவில்லை. இந்த நிலையில், இது இந்திய டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்கு முன்னோட்டமாகவே இந்தியா ‘ஏ’ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக பயிற்சிப் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் 7 வீரர்கள் விளையாடுகிறார்கள். அவர்களில் அபிமன்யு ஈஸ்வரனும் ஒருவர். தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், அவர்களது இடத்தை நிரப்ப சரியான வீரர்களைத் தேடி வருகிறது இந்திய அணி நிர்வாகம். அதற்கு இந்தப் பயிற்சிப் போட்டிகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.