
அமராவதி, ஜூன் 2- மதச்சார்பின்மை என்பது இருவழி சாலையாக இருக்க வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இன்புளுயன்சரும் சட்டக்கல்லூரி மாணவியுமான ஷர்மிஸ்தா பனோலி (22) சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.அதில், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவாக பாலிவுட் நடிகர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை, மத ரீதியாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் கொல்கத்தா போலீஸார் ஷர்மிஸ்தாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.