
அகமதாபாத்: ஜூன் 3
2025 ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த இரண்டு அணிகளுமே இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத அணிகள் என்பதால், புதிய வெற்றியாளரை ஐபிஎல் அரங்கம் சந்திக்க உள்ளது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் இந்த போட்டியில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு ஆதரவாக இருக்க முடிவு எடுத்திருக்கிறார்கள். ஆம், அந்த அணி நிச்சயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அல்ல; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆதரவாக சிஎஸ்கே ரசிகர்கள் களத்தில் குதித்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் இருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான பதிவுகளை வெளியிட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த சில சம்பவங்கள்தான் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. 2024 ஐபிஎல் தொடரின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த இரண்டாவது லீக் சுற்றுப் போட்டி வாழ்வா சாவா போட்டியாக அமைந்தது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி குறிப்பிட்ட ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது. அதேபோல, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற நிலை இருந்தது.
அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்ததால், அந்த போட்டி முடிந்தவுடன் பெங்களூரு நகரத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்களை ஆர்சிபி ரசிகர்கள் மிக மோசமாக நடத்தினார்கள். அது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அப்போது முதல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சிஎஸ்கே அணி வீழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற முடியவில்லை.