குட்டி கோலி பிறந்த நேரம்.. 15 மாதங்களில் 3 கோப்பைகளை வென்ற விராட் கோலி

பெங்களூர், ஜூன் 4- 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இதனால் விராட் கோலி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ள நிலையில், இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. விராட் கோலிக்கு மகன் பிறந்த பின் அடுத்தடுத்து 3 கோப்பையை கைப்பற்றி இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 17 ஆண்டுகளில் ஆர்சிபி அணி வீரர்களும், ரசிகர்களும் எதிர்கொள்ளாத ட்ரால்களும், அவமானங்களும் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. ஒரு கட்டத்தில் விராட் கோலியே கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற அழுத்தம் காரணமாக ஆர்சிபி அணியின் கேப்டன்சியில் இருந்தே விலகி வெளியேறினார். புதிய கேப்டனாக டூ பிளசிஸ் வந்த போதும் ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இதனால் ஆர்சிபி அணிக்கு சாபம் இருப்பதாக கூட அந்த அணியின் ரசிகர்கள் கிண்டல் செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆர்சிபி அணி 17 சீசன்களுக்கு பின் 18வது சீசனில் ஐபிஎல் கோப்பையை வென்று மகுடமாக சூட்டி கொண்டுள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் தொடங்கி இறுதிப் போட்டி வரை ஆர்சிபி அணியின் திட்டத்தில் இருந்து கொஞ்சம் கூட பின் வாங்கவில்லை. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு ரசிகர்களிடையே இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது விராட் கோலி – அனுஷ்கா சம்ரா தம்பதிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அகாய் என்று பெயரிட்டனர். மகன் பிறந்ததில் இருந்து விராட் கோலிக்கு அதிர்ஷ்டம் வந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் மகன் பிறந்த 4 மாதங்களில் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்தார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அவருடைய ஆட்டம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் நடப்பாண்டில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விராட் கோலி மிகச்சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று கொடுத்தார்.