
சென்னை:ஜூன் 20-
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில், சென்னையின் பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பது முக்கிய அம்சமாக இருந்தது. இந்த திட்டத்தை தென்னக ரயில்வே தாமதப்படுத்தி வந்ததை பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் அலுவலகம் ரயில்வே வாரியத்துக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் (CUMTA) அதிகாரி ஒருவர் இதுகுறித்து கூறுகையில், “இந்த சந்திப்பைத் தொடர்ந்து, இந்த திட்டப் பணியை விரைவுபடுத்தும்படி பிரதமர் அலுவலகம் ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேயிடம் மூன்று கேள்விகளை எழுப்பியது. ரயில்வே வாரியம் விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார். ரயில்வே வாரியம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (CUMTA) கடந்த இரண்டு வருடங்களாக இந்த திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. 2024 பிப்ரவரி மாதத்தில் இது தொடர்பான திட்ட அறிக்கையை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை..சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமத்தின் திட்ட அறிக்கையின்படி, பறக்கும் ரயில் சேவையின் ஒரு வருட இயக்கச் செலவு சுமார் ரூ.104 கோடி. ஆனால், இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.50 கோடி மட்டுமே. இந்த இணைப்பு திட்டம் நீண்ட காலமாக தாமதமாகி வருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.