
நியூயார்க், ஜூன் 20- அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா தலையிட்டால், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மூட ஈரான் எச்சரிக்கை அமெரிக்கா சியோனிஸ்டுகளுக்கு அதாவது இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக போரில் அதிகாரப்பூர்வமாக நுழைந்தால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூட தயாராக இருப்பதாக ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் அலி யாஸ்திகாஹ் மெஹ்ர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்தை சீர்குலைத்து அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த முடிவை எடுப்போம் என்று அவர் கூறி உள்ளார். நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் பெஹ்னம் சயீடி கூறுகையில், “எதிரிகளுக்கு பதிலடி கொடுக்க ஈரானிடம் பல வழிகள் உள்ளன. அதில் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதும் ஒரு வழி” என்றார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த உத்தரவிட தயாராகி வருவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியமானது? ஹார்முஸ் ஜலசந்தி என்பது மத்திய கிழக்கு வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய நீர்வழி ஆகும். இதன் குறுகலான இடத்தில், ஜலசந்தி சுமார் 21 மைல்கள் அகலம் கொண்டது, மேலும் இரண்டு திசைகளிலும் இரண்டு மைல்கள் அகலமுள்ள இரண்டு கப்பல் பாதைகள் உள்ளன. உலகின் மிக முக்கியமான ஜலசந்தி இதுதான். ஏனென்றால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீதத்தை இந்த ஜலசந்தி கையாளுகிறது, இது உலகின் மிக முக்கியமான கடல்வழி பாதைகளில் ஒன்றாகும். இந்த ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும் உலக எண்ணெய் சந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாதை தடுக்கப்பட்டால் உலகின் பொருளாதாரம் ஒரு சில வாரங்களில் பாதாளத்திற்கு செல்லும். ஈரானால் ஜலசந்தியை மூட முடியுமா? ஹார்முஸ் ஜலசந்தியை மூட முடியும் என்று ஈரான் நீண்ட காலமாக கூறி வருகிறது. இந்த ஜலசந்தியை ஒரு சாலையை மூடுவது போல் மூட முடியாது. ஆனால் வணிகப் போக்குவரத்துக்கு ஆபத்தானதாக மாற்றி, உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க ஈரான் முயற்சி செய்யலாம். இங்கே இரண்டு ஏவுகணைகளை ஏவினால் போதும்.. போக்குவரத்து சீர்குலையும். 1980 களில் ஈரான்-ஈராக் போரின்போது, ஈரான் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் எண்ணெய் ஏற்றுதல் வசதிகளை குறிவைத்து தாக்கியது. சீன தயாரிப்பான Silkworm ஏவுகணைகள் மற்றும் அதிவேக படகுகள் மூலம் ஈரான் இங்கே தாக்கியது.