இளைஞரின் சட்டையை கழற்றி இழுத்து சென்ற போலீஸ்

ஜம்மு, ஜூன் 26- நோயாளியின் உறவினரிடம் திருடிய குற்றச்சாட்டின் கீழ் இளைஞரின் சட்டையை கழற்றி போலீஸார் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் உரி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த இளைஞர் இஷ்ரக் அகமது. (24). இவர் ஜம்முவின் காசிம் நகரில் தங்கியுள்ளார்.
ஜம்மு அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் உறவினரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை இவர் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. பொதுமக்கள் அவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அப்போது இஷ்ரக்கின் சட்டையை கழற்றி, கைகளை பின்னால் கட்டி, போலீஸ் வாகனத்தின் பேனட் மீது உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.
அத்துடன் அவரது கழுத்தில் செருப்பு மாலையும் போடப்பட்டுள்ளது.
இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தகவல் அறிந்த ஜம்மு போலீஸ் எஸ்எஸ்பி ஜோகிந்தர் சிங், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.