
மெக்சிகோ சிட்டி: ஜூன் 26 –
மெக்சிகோவின் குவானாஜூவாடோ மாகாணத்தில் நடந்த சாலை கொண்டாட்டத்தில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோவின் குவானாஜூவாடோ மாகாணத்தில் இரபுவாடோ நகரில் புனித யோவானுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடந்தது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற உள்ளூர்வாசிகள் நடனமாடியும், மது அருந்தியும் கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குற்றவாளிகளை கண்டுபிடிப்போம். அவர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
அவர், ”இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
மெக்சிகோ நகரத்தின் வடமேற்கே அமைந்துள்ள குவானாஜுவாடோ, பல ஆண்டுகளாக மெக்சிகோவின் மிகவும் வன்முறை நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.