
நியூயார்க், ஜூன் 28- இஸ்ரேல் – ஈரான் போரில் திடீரென்று நுழைந்த அமெரிக்கா, ஈரானின் முக்கிய 3 அணுசக்தி நிலையங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தங்களின் அணுசக்தி நிலையங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் உறுதி செய்துள்ளது. இதனால் அந்த நாட்டின் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இது இஸ்ரேல் – அமெரிக்காவுக்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் அடுத்த குறி அணுஆயுதம் கொண்டு மிரட்டும் வடகொரியாவா? என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அமெரிக்கா – வடகொரியா மோதினால் அது அணுஆயுத போர் பதற்றத்தை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்று நிபுணர்கள் வார்னிங் செய்துள்ளனர். இஸ்ரேல் – ஈரான் இடையே நடந்த 12 நாள் போர் முடிவுக்கு வந்துள்ளது. இருநாடுகள் இடையே இருந்த நீண்டகால மோதல் போராக மாறியது. இருநாடுகளும் மாறி மாறி ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நின்றது. அதுமட்டுமின்றி திடீரென்று அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதனை இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் விரும்பவில்லை. இதனால் தான் இருநாடுகளும் சேர்ந்து ஈரானின் அணுஆயுத திட்டத்துக்கு உதவும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தின. அமெரிக்காவை எடுத்து கொண்டால் ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி நியைலங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஃபோர்டோ என்பது பூமிக்கடியில் அமைக்கப்பட்ட அணுசக்தி நிலையமாகும். இதனால் அதனை அழிக்க அமெரிக்கா தனது பி 2 பாம்பர்ஸ் போர் விமானங்களை பயன்படுத்தி 13,600 கிலோ எடையுள்ள GBU-57A/B மாசிவ் ஆர்ட்னன்ஸ் பெனட்ரேட்டர் (MOP) எனும் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இது வெடிப்பதற்கு முன்பு 200 அடி வரை செல்லும். அதன்பிறகு தான் பயங்கர சத்தத்துடன் வெடித்து மொத்த கட்டமைப்புகளையும் சிதைக்கும். அதேபோல் பிற 2 அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட 3 இடங்களும் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதல் மூலமாக ஈரான் தனது அணுஆயுத தயாரிப்பு பணியில் 10 ஆண்டுகள் பின்னுக்கு சென்றுள்ளது’’ என்றார்.