
ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியை அழிக்கும் திட்டம் இருந்தது என்று இஸ்ரேல்பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேல், ஈரான் இடையே 12 நாட்கள் தீவிர போர் நடைபெற்று முடிந்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அணு ஆயுதங்களை ஈரான் தயாரிப்பதை தடுக்க கடந்த 13-ம் தேதி அந்த நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தோம். 12 நாட்கள் நீடித்த போரில் எங்களது லட்சியங்களை அடைந்துவிட்டோம்.
இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம். தற்போது நடத்தப்பட்ட தாக்குதலை விட 100 மடங்கு அதிகமாக தாக்குதல் நடத்துவோம். ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி நவீனகால ஹிட்லராக செயல்படுகிறார். போரின்போது அவரை மிக தீவிரமாக தேடினோம். அவரை கொல்லும் திட்டம் இருந்தது. இதற்கு அமெரிக்காவின் அனுமதி அவசியமில்லை. ஆனால் அவர் பூமிக்கு அடியில் பாதாள அறையில் ஒளிந்து கொண்டார்.
இதன்காரணமாக இஸ்ரேல் ராணுவத்திடம் அவர் சிக்கவில்லை. கொமேனி தொடர்ந்து பாதாள அறையில் பதுங்கி இருந்தால் அவருக்கு நல்லது. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் எங்கிருக்கிறது என்பது தெரியவில்லை. எனினும்இனிமேல் ஈரானால் யுரேனியத்தை செறிவூட்ட முடியாது. அந்த நாட்டின் அணு சக்தி தளங்கள்முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. இவ்வாறு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
அணு ஆயுத தடை சட்டம்: கடந்த 1970-ம் ஆண்டில் அணு ஆயுத தடை சட்டத்தில் ஈரான் கையெழுத்திட்டது. இந்த சூழலில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி கூறும்போது, ‘‘சர்வதேச அணு சக்தி முகமைக்கு இனிமேல் ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம்’’ என்று தெரிவித்தார்.