திமுக தேர்தல் வியூகம் முதல்வர் தலைமையில் ஆலோசனை

சென்னை: ஜூன் 28 –
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற திமுக இலக்கு நிர்ணையித்துள்ள நிலையில், இது தொடர்பாக வியூகம் வகுக்கும் வகையில் முக்கிய ஆலோசனை நடைபெறும் எனத்தெரிகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தற்போதே முடுக்கிவிட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக தனது தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் முதல்வரும் திமுக தலைவருமான முக ஸ்டாலின் ஒன் டூ ஒன் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தொகுதிகளை நான்கு பிரிவுகளாக வைத்துள்ளோம். அடர் பச்சை, இளம் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என்ற வகையில் தொகுதிகளை வரிசைப்படுத்தி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணையித்துள்ள ஸ்டாலின் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பயணித்து வரும் மு.க. ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்திக்கும் வகையில் ரோடு ஷோ நடத்தி வருகிறார். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. “ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை” குறித்து, கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம், இன்று சனிக்கிழமை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.