30 வருடங்களாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி கைது

சென்னை: ஜூலை 2 –
தமிழகத்தில் 30 வருடங்களாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில், வெடிகுண்டு தாக்குதல்களிலும், மத ரீதியான கொலைகளிலும் தொடர்புடையதாக கூறப்படும் முக்கிய தீவிரவாதிகள் 2 பேர் ஆந்திர மாநிலத்தில் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த விவரங்கள் தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2013ம் ஆண்டு சென்னையில் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கூட்டாளிகளான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இருமாநில காவல்துறையினர் மேற்கொண்ட ஆபரேஷனில் சிக்கினார்கள்.. இவர்களுடன் தொடர்புடைய அபுபக்கர் சித்திக்கை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், தற்போது அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோர் போலீசாரிடம் சிக்கியிருக்கிறார். கடந்த 1995 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டம் தீட்டி தீவிரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்தவர்கள்தான் நாகூர் அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி. அதேபோல, 2012-ல் வேலூர் மருத்துவர் அரவிந்த்ரெட்டி கொலை வழக்கு, 1995ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு வழக்கு, நாகூர் தங்கம் முத்துக்கிருஷ்ணன் வீட்டில் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கு. 1999-ல் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உட்பட 07 இடங்களில் (சென்னை. திருச்சி, கோவை. கேரளா) குண்டுகள் வைத்த வழக்கு, 2011 மதுரை திருமங்கலம் அத்வானி ரதயாத்திரையின் போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு, 2013-ல் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகே குண்டு வெடித்த வழக்குகளில் முக்கியப் பங்காற்றியவர் அபுபக்கர் சித்திக்.. கடந்த 30 வருடங்களாகவே தலைமறைவாக இருந்த நிலையில், போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1999-ல் தமிழகம் மற்றும் கேரளாவில் 7 இடங்களில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கில் 26 வருடங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளியான திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி (எ) யூனுஸ் (எ) மன்சூரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் தீவிரவாத தடுப்புப் படையினரால் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இவர்களிடம் விசாரணை நடக்கவுள்ளதோடு, மேலும் யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள் என்பதை கண்டறிவதற்காக காவல் துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.