இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு எதிராக கொந்தளித்த ஆதித்யா தாக்கரே

மும்பை, ஆகஸ்ட் 21- “பயங்கரவாதத் தாக்குதல்கள் ஒருபுறம் தொடரும்போது, கிரிக்கெட் உறவுகள் மட்டும் தேவையா? நாட்டு நலனை விட பிசிசிஐ-க்கு வருமானம்தான் முக்கியமா?” என சிவசேனா (UBT) தலைவர் ஆதித்யா தாக்கரே, இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டிக்கு எதிராகக் கொந்தளித்துள்ளார். இது கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள 2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது. துபாயில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டிக்கு எதிராகத்தான் ஆதித்யா தாக்கரே தனது குரலை உயர்த்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பல அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் தனது கடிதத்தில், “பாகிஸ்தானில் இருந்து கிளம்பும் பயங்கரவாதத்தால் நமது வீரர்களும், மக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், பிசிசிஐ மட்டும் வெட்கமின்றி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட அணி அனுப்புவது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், “பணத்திற்காகவும், விளம்பர வருமானத்திற்காகவும் பிசிசிஐ, நமது ராணுவ வீரர்களின் தியாகத்தையும், தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் வலியையும் மிகத் துச்சமாக மதிக்கிறதா? தேச நலனை விட பிசிசிஐ பெரிய அமைப்பாகிவிட்டதா?” என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார். பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் பின்வாங்கியதைச் சுட்டிக்காட்டிய தாக்கரே, “அவர்கள் அப்படி இருக்கும்போது, நாம் மட்டும் சுயநலத்திற்காக அவர்களுடன் விளையாடுவது வெட்கக்கேடானது” என்று குறிப்பிட்டுள்ளார். “ரத்தமும், தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று நமது பிரதமர் செங்கோட்டையில் பேசுகிறார். ஆனால், பிசிசிஐ-க்கு மட்டும் ரத்தமும், வருமானமும் ஒன்றாகப் பயணிக்க முடியுமா?” என்றும் ஆதித்யா தாக்கரே தனது சமூக வலைதளப் பதிவில் கடுமையாகச் சாடியுள்ளார். 2025 ஆசியக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் செப்டம்பர் 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.