தெலுங்கானாவில், காலேஸ்வரம் லிப்ட் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரைத்தார். எந்நேரமும் கைதாகலாம் என்பதால், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கலக்கமடைந்துள்ளார்.
தெலுங்கானாவில், 2014 – 2023 டிச., வரை தொடர்ந்து இரு முறை, பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், முதல்வராக பதவி வகித்தார்.
விசாரணை கமிஷன்
இவரது ஆட்சியில், ஜெயசங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா என்ற இடத்தில், காலேஸ்வரம் லிப்ட் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ், 1.05 லட்சம் கோடி ரூபாயில் பிரமாண்ட அணை கட்டப்பட்டது.
சந்திரசேகர ராவ் ஆட்சி முடியும் நேரத்தில், அதாவது, 2023 அக்டோபரில் அணையின் ஐந்து துாண்கள் சரிந்து கீழே இறங்கின. மேலும் நீரேற்றும் கட்டுமானமும் இடிந்து விழுந்து நீரில் மூழ்கியது. அணை கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதைத் தொடர்ந்து, 2023 நவம்பரில் தெலுங்கானாவில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் காங்., அபார வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வர் ஆனார்.
காலேஸ்வரம் அணை முறைகேடு குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சி.கோஷ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. 15 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடத்திய கமிஷன், 665 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை, ஜூலை 31ல் தெலுங்கானா அரசிடம் சமர்ப்பித்தது.
இதையேற்று, விரைவில் சி.பி.ஐ., விசாரணையை துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எந்நேரமும் கைதாகலாம் என்பதால், முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் கலக்கமடைந்துள்ளார்.
இதற்கிடையே, இந்த வழக்கில் அரசு நடவடிக்கையில் இருந்து பாதுகாப்பு கோரி, சந்திரசேகர ராவ், ஹரிஷ் ராவ் தரப்பில் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் நேற்று மறுத்து விட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.















