வரி குறைப்பால் வளர்ச்சி அதிகரிக்கும்

புதுடெல்லி: செப். 22 –
நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று அமலுக்கு வருகிறது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி 2.0 வரி விகிதம் இன்று அமலுக்கு வருகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அவர் பேசிய தாவது: நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள். நவராத்திரி பண்டிகை தொடங்கும் இந்த நன்னாளில் (இன்று) சுயசார்பு இந்தியா இயக்கத்தின் மிக முக்கிய மாற்றம் தொடங்க உள்ளது. அதாவது, ஜிஎஸ்டி 2.0 வரிவிகிதம் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களில் சேமிப்பு திருவிழா தொடங்குகிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த பண்டிகை காலத்தில் உங்கள் சேமிப்பு கணிசமாக அதிகரிக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்க முடியும். ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
புதிய வரி விகிதத்தால் ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள். நாட்டின் பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ச்சி அடையும். ஒரு காலத்தில் சேவை வரி, வாட், கலால் வரி, விற்பனை வரி, நுழைவு வரி என பலவிதமான வரிகள் விதிக்கப்பட்டன. ஒரு பொருளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல 12-க்கும் மேற்பட்ட வரிகள்விதிக்கப்பட்டன.