ஜெருசலேம், செப். 22- பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்த ஆஸி, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: பாலஸ்தீன நாடு இருக்காது. எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் முயற்சிகளுக்கு நான் அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு திரும்பிய பிறகு பதிலடி கொடுக்கப்படும். படுகொலைக்குப் பிறகும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் தலைவர்களுக்கு நான் ஒன்றை தெளிவாக சொல்கிறேன். நீங்கள் பயங்கரவாதத்திற்கு மகத்தான பரிசை வழங்குகிறீர்கள். மேலும் உங்களுக்கு இன்னொரு விஷயத்தை சொல்கிறேன். அது நடக்கப் போவதில்லை. ஜோர்டான் நதியின் மேற்கில் எந்த பாலஸ்தீன அரசும் இருக்காது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் அழுத்தத்திற்கு எதிராக, அந்த பயங்கரவாத அரசு உருவாவதை பல ஆண்டுகளாக நான் தடுத்துள்ளேன்.




















