நியூயார்க், செப். 23- இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல ஆண்டு கால மோதலை தீர்ப்பதற்கு ஒரே வழி இரு நாடுகள் தான் தீர்வு மட்டுமே சாத்தியமாக இருக்கும் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர நடந்த பேச்சு அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்த சூழலில், பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளித்த ஆஸி, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர், ‘’பாலஸ்தீன நாடு இருக்காது. எங்கள் நிலத்தின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் முயற்சிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்’’ என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இது குறித்து ஐநா தலைமையகத்தில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் பேசியதாவது: பாலஸ்தீனத்திற்கு அரசு அந்தஸ்து என்பது ஒரு உரிமை. வெகுமதி அல்ல. அரசு அந்தஸ்தை மறுப்பது எல்லா இடங்களிலும் உள்ள பயங்கரவாதிகளுக்கு ஒரு பரிசாக இருக்கும். இரண்டு அரசுகள் இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி இருக்காது. இவ்வாறு அவர் பேசினார். ஒரே வழி என்ன? ஐநா தலைமையகத்தில் ஆங்கில செய்தி சேனலுக்கு, ஐநா செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், ‘’இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் தற்போது நாம் காணும் சவால்களுக்கு இரு நாடுகள் தான் தீர்வு. இருநாடுகள் தீர்வு கூட்டம் பொதுச்சபைக்கு மிகவும் முக்கியமானது’’ என்றார். அடுத்தது என்ன? பாலஸ்தீனத்தை ஐ.நா.,வின் 193 உறுப்பு நாடுகளில், இந்தியா உட்பட 140க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இவர்களின் நட்பு நாடுகள் உட்பட குறைந்தது 45 நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகளில் பெரும்பாலானவை, ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் அது இருக்கக் கூடாது என்று கூறியுள்ளன. ஆனால், இதை ஹமாஸ் ஏற்கவில்லை. ‘அங்கீகாரம் என்பது அரசியல் மற்றும் சட்டப்பூர்வ உரிமைக்கும் இடைப்பட்டதாகும். அங்கீகாரம் அளிப்பதாலேயே, ஒரு குறிப்பிட்ட பகுதி தனி நாடாக முடியாது ‘ என, நிபுணர்கள் கூறுகின்றனர்.


















