துபாய், செப். 24- ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக இறுதிப் போட்டியில் கால்பதிக்கும். ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி இன்று இரவு வங்கதேசத்துடன் மோதுகிறது இரு அணிகளும் சர்வதேச டி 20-ல் 17 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் வங்கதேச அணி ஒரே ஒரு முறை மட்டும் வெற்றி கண்டிருந்தது.பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பந்து வீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறிது தடுமாற்றம் கண்டிருந்தது. இந்த விஷயங்களில் இந்திய அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா, 47 ரன்கள் சேர்த்த ஷுப்மன் கில் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். இதேபோன்று பந்து வீச்சில் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்த ஷிவம் துபேவும் மீண்டும் ஒருமுறை உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தக்கூடும். சுழலில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல் கூட்டணி வங்கதேச அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
கடந்த ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்திருந்த ஜஸ்பிரீத் பும்ரா பார்முக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும். லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி தடுமாறியே சூப்பர் 4 சுற்றுக்கு நுழைந்திருந்தது. எனினும் அந்த அணி சூப்பர் 4 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் இலங்கை அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. அந்த ஆட்டத்தில் 169 ரன்களை இலக்கை விரட்டிய வங்கதேச அணி ஒரு பந்து மீதம் இருக்கையில் வெற்றியை வசப்படுத்தியிருந்தது.

















