துபாய், செப். 26- மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். அதேவேளையில் கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன் நீக்கப்பட்டுள்ளனர். மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி அடுத்தவாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் அக்டோபர் 2 முதல் 6-ம் தேதி வரை அகமதாபாத்தில் தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அக்டோபர் 10 முதல் 14-ம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.இந்நிலையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் நேற்று இதனை இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா அணிக்கு திரும்பி உள்ளார். பும்ராவுக்கு போதுமான அளவு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பேட்டிங்கில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தாத கருண் நாயர் நீக்கப்பட்டுள்ளார். அவர், 8 இன்னிங்ஸில் 205 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். இந்த சுற்றுப்பயணத்தில் ஒரு முறை கூட களமிறங்க வாய்ப்பு கிடைக்காத மேற்கு வங்க பேட்ஸ்மேன் அபிமன்யு ஈஸ்வரனும் நீக்கப்பட்டுள்ளார். கருண் நாயருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த 25 வயதான இடது கை பேட்ஸ்மேனான தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்தை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சாய் சுதர்சன் 6 இன்னிங்ஸில் 140 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் துணை கேப்டனுமான ரிஷப் பந்த் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் துணை கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக துருவ் ஜூரெல், நாராயண் ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயம் காரணமாக பாதியில் விலகியிருந்த ஆல்ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி காயத்தில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளார்

















