திருமலை: செப்.27-
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் தாரளமாக நன்கொடைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதுபோல் நன்கொடை வழங்குவோருக்கு, அவர்களின் நன்கொடைக்கேற்ப திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
அதன் விவரங்கள் வருமாறு: ஒவ்வொரு ரூ. 10 ஆயிரம் நன்கொடைக்கும், ஒரு நபருக்கு விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படுகிறது.
இதுவே ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினால், அந்த பக்தர் வாணி அறக்கட்டளை மூலம் 9 முறை சுவாமியை வெகு அருகில் தரிசனம் செய்து கொள்ளலாம்.ரூ.5 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்கள், ஆண்டுக்கு ஒருமுறை சுபதம் நுழைவுவாயில் வழியாக 5 பக்தர்களுக்கு தரிசன பாக்கியம் வழங்கப்படும். ஒரு நாள் திருமலையில் தங்குவதற்கு அறையும் வழங்கப்படும். மேலும், தரிசனம் முடிந்ததும் சிறிய லட்டு பிரசாதங்கள் 6, ஒரு ரவிக்கை, ஒரு துண்டு ஆகியவை வழங்கப்படும்.ரூ.10 லட்சம் வரை நன்கொடை வழங்கும் பக்தர்கள், ஆண்டுக்கு 3 முறை 5 பக்தர்கள் சுபதம் நுழைவுவாயில் வழியாக சுவாமியை தரிசிக்கலாம். இவர்களுக்கு திருமலையில் தொடர்ந்து 3 நாட்கள் தங்குவதற்கு வசதிகள் செய்து தரப்படும்.
மேலும், ஒவ்வொரு முறையும் தரிசனம் செய்யும்போது, 10 சிறிய லட்டு பிரசாதம், 5 மகா பிரசாதம் வழங்கப்படும். இத்துடன் ரவிக்கை, துண்டு ஆகியவை வழங்கப்படும்.


















