கேரள ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் திடீரென ஒத்திவைப்பு

திருவனந்தபுரம்: செப்.27-
கேரள ஓணம் பம்பர் லாட்டரி (Kerala Thiruvonam Bumper 2025) டிக்கெட்டிற்கான குலுக்கல் இன்று நடைபெறுவதாக இருந்தது. ரூ.25 கோடி வெல்லப்போகும் அதிர்ஷ்டசாலி யார்? என்பதை அறிந்து கொள்ள கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக இன்று குலுக்கல் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் பம்பர் குலுக்கல் ஒத்திவைக்கப்பட்டது ஏன்? புதிய குலுக்கல் தேதி எப்போது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். கேரள லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் (செப்டம்பர் 27) இன்று நடைபெறுவதாக இருந்தது. இன்று பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் இந்த டிக்கெட் குலுக்கல் நடைபெறும் என்று கேரள லாட்டரித்துறை அறிவித்திருந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக அனல் பறக்க டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்தது. ரூ.500 விலை கொண்ட இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசு ரூ.25 கோடி என்பதால் லாட்டரி பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் முதல் பரிசு விழுந்துவிட்டால் கனவில் கூட நினைத்து பார்க்காத அளவுக்கு வாழ்க்கையில் ஒரே நாளில் பெரிய திருப்பம் ஏற்பட்டு விடும்.. இதுநாள் வரை பட்ட கஷ்டமெல்லாம் தீர்ந்து வீடும் என்ற ஆசையால் கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிந்தது. ஏதோ ஒரு சிலருக்கு பரிசு அடித்துவிட்டு பிற எல்லாருக்கும் ஏமாற்றமே மிஞ்சும். அதிகபட்சமாக பாலக்காட்டில் 14 லட்சம் டிக்கெட்டுகளும், திருச்சூரில் 9.37 லட்சம் டிக்கெட்டுகளும் திருவனந்தபுரத்தில் 8.75 லட்சம் டிக்கெட்டுகளும் விற்றுள்ளன. இன்று பிற்பகல் நடைபெறும் குலுக்கலை கேரள லாட்டரி பிரியர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த நிலையில், திடீர் திருப்பமாக குலுக்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குலுக்கல் எப்போது நடைபெறும்? லாட்டரி குலுக்கல் வரும் அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று கேரள லாட்டரித்துறை அறிவித்துள்ளது. கனமழை மற்றும் ஜிஎஸ்டி வரி மாற்றம் காரணமாக விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டதால் குலுக்கல் தேதியை தள்ளி வைக்குமாறு கேரள லாட்டரி விற்பனையாளர்கள் மற்றும் ஏஜென்ட்கள் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முடிவை கேரள லாட்டரித்துறை அறிவித்துள்ளது.