கோவை: செப். 30-
கரூர் கொடுந்துயர நிகழ்வில் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை தலைமைக்கு தெரியப்படுதுவோம். இதற்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை விமான நிலையத்தில் ஹேமா மாலினி தலைமையிலான பாஜக எம்.பிக்கள் குழுவினர் தெரிவித்தனர்.
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நட்டா உத்தரவின் பேரில் எம்.பி ஹேமா மாலினி தலைமையில் அமைக்கப்பட்ட எட்டு பேர் குழுவினர் இன்று காலை கோவை விமான நிலையம் வந்தனர்.
எம்.பி ஹேமா மாலினி மற்றும் எம்.பி அனுராக் தாகூர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக கரூரில் நடைபெற்ற கொடுந்துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களை நாங்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதுடன் அவர்களுடன் உணர்வுபூர்வமாக உடன் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தவே இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் நேரில் கள ஆய்வு செய்து அதன் அறிக்கையை எங்கள் தலைமையகத்துக்கு சமர்ப்பிப்போம். கள ஆய்வு மேற்கொண்ட பின் மட்டுமே இந்நிகழ்வுக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும். நேற்று மாலை இந்த குழு அமைக்கப்பட்டது. இதில் மகாராஷ்ட்ரா, ஹிமாச்சலப் பிரதேசம், மதுரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த எம்.பிக்கள் உள்ளனர்.
குழு அமைக்கப்பட்ட உடன் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு கோவை வந்துள்ளோம். கரூர் சம்பவத்திற்கு யார் காரணம், தவறு எங்கே நடந்தது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் தீவிரமாக விசாரிப்போம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

















