பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்

புதுடில்லி, அக். 3- பிரிட்டனின் மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய ஒற்றுமை அவசியம் என இந்தியா வலியுறுத்தி உள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டரில் உள்ள யூத வழிபாட்டு தலத்தில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கத்தியால் குத்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மான்செஸ்டரில் உள்ள ஹீட்டன் பார்க் ஜெப ஆலயத்தில் வழிபாட்டின் போது நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த கொடூரமான செயல் நடந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறோம். இந்த துயர தருணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் ஆதரவாக இருப்போம். இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.