திருப்பூர்: அக்டோபர் 10
தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால், அதற்கு அதிமுக குரல் கொடுக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். அதிமுக மாபெரும் கூட்டணியை அமைக்கும் என்றும், அதற்காக பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். கரூர் சம்பவத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் மற்றும் தவெக மீது அதிமுக ஒரு நட்பு பாராட்டி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாகவே விஜய்யை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.
இதனால் அதிமுக – தவெக கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டது.
இதனிடையே நேற்று முன் தினம் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, அதிமுக தொண்டர் ஒருவர் தவெக கொடியுடன் கூட்டத்தில் இருந்தார். அதனை பார்த்து எடப்பாடி பழனிசாமி, “பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்று உற்சாகமாக பேசினார். இதனால் தவெகவை தங்களின் கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாசி ஜெயராமன் பேசுகையில், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். கரூர் சம்பவத்திற்கு அதிமுக சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டால், ஸ்டாலினுக்கு ஏன் தயக்கம்? தவெக தொண்டர்களை பொய் வழக்கு போட்டு மிரட்டும் செயல்களில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது. தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால், அதனை எதிர்த்து அதிமுக குரல் கொடுக்கும். திமுகவையும், ஸ்டாலினையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.
அதிமுக மாபெரும் கூட்டணியை அமைக்கும் என்றும், கூட்டத்தில் தவெகவினர் கலந்து கொண்டது அதற்கான பிள்ளையார் சுழி என்றும் சொல்லி இருக்கிறார்.இதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தவெக தொண்டர்களுக்காக அதிமுக நேரடியாக குரல் கொடுக்கும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசி இருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு மேற்கொண்ட நாமக்கல் பிரச்சாரத்திலும் தவெக கொடி அதிகமாக தென்பட்டது.இதனால் தவெக தொண்டர்கள் அதிமுக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்புவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுவதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் கரூர் சம்பவத்திற்கு பின் கூட்டணி அமைக்க வேண்டும், கட்சிகள் மத்தியில் ஆதரவை திரட்ட வேண்டும் என்பதில் விஜய் குறியாக இருப்பதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.















