
காரைக்குடி: அக். 16-
வளமும், வாய்ப்புகளும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா இருக்கை சார்பில் ‘வளர்ச்சியடைந்த இந்தியா–2047, நல்லாட்சியும் நிலையான வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒருங்கிணைந்த மனிதநேயமும்’ என்ற தலைப்பில் 2 நாள் தேசியக் கருத்தரங்கு நேற்று தொடங்கியது. துணைவேந்தர் க.ரவி வரவேற்றார்.
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காணவும், தேசக் கட்டமைப்பில் பங்காற்றவும் அப்துல் கலாம் ஊக்கமளித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வரி வசூலிக்கும் கருவிகளாகவும், மக்களை அச்சுறுத்தும் சாதனங்களாகவும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை இருந்தன. தற்போது அந்நிலை மாறியுள்ளது. நமது ரிஷிகள், முனிவர்கள், கவிஞர்கள் தங்கள் ஞானத்தால் தலைமுறைக்கு ஏற்றபடி சூழலை மாற்றி அமைத்தனர்.நாட்டில் 70 லட்சம் பழங்குடியினர் உள்ளனர். அவர்களில் 12 லட்சம் பேர் தமிழகத்தில் உள்ளனர். அவர்களுக்கு பலனளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்தியவர் பிரதமர் மோடி. உணவு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் வேறுபட்டாலும் தீன்தயாள் உபாத்யாயா தத்துவத்தின்படி நாம் அனைவரும் ஒரே குடும்பம்.
உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியதற்கு ஒருங்கிணைந்த மனிதநேயமே காரணம். அதுவே, வெளியுறவுக் கொள்கையிலும் உள்ளது. வளமும், வாய்ப்புகளும் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
டெல்லியில் உள்ள இந்திய கலாச்சார மையத் தலைவர் வினய் பி.சஹஸ்ரபுத்தே, காந்திகிராம நிகர்நிலை பல்கலை.
துணைவேந்தர் பஞ்சநதம் ஆகியோர் பேசினர். பதிவாளர் செந்தில்ராஜன் நன்றி கூறினார். முன்னதாக, அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி பல்கலை. வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஆளுநர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி, காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.















