பஹல்காம் தாக்குதல் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

ஸ்ரீநகர்: அக். 30-
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த ஏப்., 22ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணியர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, ‘தி ரெசிஸ்டென்ஸ் பிரன்ட்’ பொறுப்பேற்றது.
கடந்த ஜூலையில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை ஆய்வு செய்தபோது, காஷ்மீரை சேர்ந்த நபர் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குல்காமை சேர்ந்த கட்டாரியா, 26, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கட்டாரியாவை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கில், உள்ளூர்வாசிகளான பஷீர் மற்றும் பர்வேஸ் ஜோதர் கைது செய்யப்பட்டனர். கடந்த செப்டம்பர் 18ம் தேதி விசாரணையை முடிக்க நீதிமன்றம் 45 நாட்கள் கால நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டது. இது இந்த வாரம் முடிவடைகிறது. அனைத்து விசாரணையும் முடிவடைந்த நிலையில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது. குற்றப்பத்திரிகையில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பாக் பயங்கரவாதிகளுக்கு உதவிய உள்ளூர்வாசிகள் பெயர்கள் இடம்பெறும் என என்ஐஏ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.