
நவி மும்பை, நவ. 3- நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியிருக்கிறது இந்திய அணி. இதில் முக்கியப் பங்களிப்பாக பேட்டிங்கில் தொடக்க வீரராக இறங்கி ஷெஃபாலி வர்மா அடித்த 87 ரன்களும், பிறகு அவர் சுழற்பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ‘இது ஷெஃபாலியின் நாள் என்று எனக்குத் தெரியும்’ என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புகழாரம் சூட்டியுள்ளார். ஷெஃபாலி வர்மா 78 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களை விளாசினார். முக்கியமாக, 45 ரன்கள் விளாசிய ஸ்மிருதி மந்தனாவுடன் முதல் விக்கெட்டுக்காக 18 ஓவர்களில் 104 ரன்கள் கூட்டணி மூலம் நல்ல அடித்தளம் வழங்கினார். அரையிறுதி ஆட்டத்தில் அசத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழக்க, கவுர் 20 ரன்களில் வெளியேறினார். ஆனால் தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் இருவரும் கடைசியில் விளாசித் தள்ளி ஸ்கோரை 298 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். தென் ஆப்பிரிக்கா அணி இலக்கை விரட்டியபோது அந்த அணியின் கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான லாரா வோல்வார்ட் தான் ஒரு போராளி சிங்கம் என்பதை நிரூபித்து 98 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்ஸருடன் 101 ரன்கள் எடுத்து 41-வது ஓவரில் 7-வது விக்கெட்டாக விழுந்தார். தீப்தி ஷர்மா பந்தைத் தூக்கி அடிக்க, அதை டீப் மிட்விக்கெட்டில் ஓரிரு முறை பந்தை தட்டி விட்டு தடுமாறினாலும் பிடித்து விட்டார் அமன்ஜோத் கவுர். தென் ஆப்பிரிக்கா கதை முடிந்தது. கடைசி 5 விக்கெட்டுகளை 37 ரன்களுக்கு இழந்தது தென் ஆப்பிரிக்கா. தீப்தி ஷர்மா 39 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்து அட்டகாசமான பவுலிங்கினால் இந்தியாவுக்கு வெற்றியை உறுதி செய்தார். ஷெஃபாலி வர்மா தன் ஆல்ரவுண்ட் செயல்திறனுக்காக ஆட்ட நாயகி விருதையும், தீப்தி ஷர்மா தொடர் நாயகி விருதையும் தட்டிச் சென்றனர். ஷெஃபாலி வர்மா தினம்’: இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் உள்ளுணர்வினால் ஷெஃபாலிக்கு பவுலிங் கொடுத்தது மாஸ்டர் ஸ்ட்ரோக் எனலாம். இந்த இறுதிப் போட்டிக்கு முன்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஷெஃபாலி 30 ஓவர்களையே வீசியிருக்கிறார். ஆனால், வந்தவுடனேயே தென் ஆப்பிரிக்காவின் முக்கியக் கூட்டணியான வோல்வார்ட் – சுனே கூட்டணியை உடைத்தார்.அந்த இருவருக்கும் 52 ரன்கள் கூட்டணி என்று கொஞ்சம் தென் ஆப்பிரிக்கா பலமாகவே சென்று கொண்டிருந்தது. அப்போது அருமையான ரிட்டர்ன் கேட்ச் மூலம் சுனே லஸ்சை 21-வது ஓவரில் பெவிலியனுக்கு அனுப்பினார் ஷெஃபாலி வர்மா. பிறகு 2-வது ஓவரின் முதல் பந்திலேயே மரிசான் காப்-ஐ லெக் திசையில் எட்ஜ் கேட்ச் மூலம் வீழ்த்தினார் ஷெஃபாலி.


















