மத்திய அரசு விரும்பவில்லை” : தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றச்சாட்டு

டெல்லி, நவ. 4- ஒன்றிய அரசுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை என்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் குற்றம் சாட்டி உள்ளார்.
நள்ளிரவில் மனு தாக்கல் செய்து வழக்கை ஒத்திவைக்க முயற்சி நடந்துள்ளது என்றும் தலைமை நீதிபதி விமர்சனம் செய்துள்ளார்.
நாடு முழுவதும் தீர்ப்பாயங்களுக்கு ஒரே மாதிரியான நியமனம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி, வழக்கை 5 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, “மனுதார்கள் தரப்பிலான வாதங்கள் முடிந்த பின்னர் இந்த கோரிக்கை வைப்பதை ஏற்க முடியாது. இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தனது அமர்வு வழக்கை விசாரிக்க கூடாது என்று ஒன்றிய அரசு விரும்புகிறது. அதனால்தான் நள்ளிரவில் வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என்று கடுமையாக விமர்சித்தார். பின்னர் ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 7ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைத்தது. இதனிடையே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இம்மாதம் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
வழக்கை தாமதப்படுத்தினால் அவரால் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது