புதுடில்லி, நவ. 7- வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.வங்கக்கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, ‘வந்தே மாதரம்’ பாடலை, 1875ம் ஆண்டு நவம்பர் 7ல் அட்சய நவமி நாளில் எழுதினார். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்த பாடல், ‘ஆனந்த மடம்’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டு நிறைவடைவதை இசை, கலை நிகழ்ச்சி நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய கலாசார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வானது இன்று (நவ.,07) துவங்கி 2026ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இன்று துவங்கி நவ.,14 வரையிலும் முதல் கட்டமாகவும், குடியரசு தினத்தையொட்டி 2026 ஜனவரி 19 – 26 வரை இரண்டாம் கட்டமாகவும், 2026 ஆக.,7 – 15 வரை மூன்றாம் கட்டமாகவும், பின் 2026 நவ.,1-7 வரை கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட வேண்டும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதையொட்டி டில்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் இன்று (நவ.,07) நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. முன்னதாக, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நவம்பர் 7ம் தேதி, நம் நாட்டு மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இருக்கும். நம் நாட்டின் தலைமுறையினரை தேசபக்தி உணர்வால் ஊக்கமளிக்கும் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.















