
புதுடெல்லி, நவ. 12- சீனாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் போட்டிக்குச் செல்வதற்காக சீன தூதரகத்தின் உதவியை இந்திய டென்னிஸ் வீரர் சுமித் நாகல் நாடியுள்ளார். சீனாவின் செங்டு நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக செங்டு செல்ல விசாவுக்காக சுமித் நாகல் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் அவரது விசா விண்ணப்பம் எந்தவித காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சீன தூதரகத்தின் உதவியை சுமித் நாகல் நாடியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சுமித் நாகல் வெளியிட்டுள்ள பதிவில், “சீனாவின் செங்டு நகரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் பங்கேற்க இருந்தேன். ஆனால், எனது விசா விண்ணப்பம் எவ்வித காரணமும் இன்றி நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவிலுள்ள சீன தூதரக அதிகாரிகள் எனக்கு உடனடியாக உதவ முன்வரவேண்டும்” என தெரிவித்துள்ளார்.


















