ஹைதராபாத், நவ. 28- ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் விக்ரம் 1 ராக்கெட்டை பிரதமர் மோடி நேற்று அறிமுகம் செய்தார். அதோடு ஹைதராபாத்தில் ஸ்கைரூட் நிறுவனத்தின் இன்ஃபினிட்டி வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் மற்றும் ஐஐடி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்.
இது நாட்டின் முதல் தனியார் விண்வெளி நிறுவனம். இந்நிறுவனம் தயாரித்த விக்ரம்-எஸ் என்ற சிறிய ரக ராக்கெட் கடந்த 2022 நவம்பர் மாதம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்நிறுவனம் தற்போது செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்த கூடிய ராக்கெட்டுகளை வர்த்தக ரீதியில் அனுப்ப தயாராகியுள்ளது. இந்நிறுவனம் ஹைதராாபாத்தில் 2 லட்சம் சதுர அடியில் மிகப் பெரிய வளாகத்தை அமைத்துள்ளது. இன்ஃபினிட்டி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த வளாகத்தை நேற்று காணொளி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதோடு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த விக்ரம் 1 என்ற ராக்கெட்டையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இந்த வளாகம் மாதத்துக்கு ஒரு ராக்கெட்டை உருவாக்கும் திறன் படைத்தது என அதன் நிறுவனர் பவன் சந்தனா கூறியுள்ளார்.















