
மாஸ்கோ, நவ. 28- உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதித் திட்டம் குறித்து ரஷ்ய அதிபர் புடின் மவுனம் கலைத்துள்ளார். உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு நிலப்பரப்பை ரஷ்யா கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ரஷ்யப் படைகள் தற்போது கிழக்கு உக்ரைனில் அந்நாட்டு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி திட்டத்தை முன்மொழிந்து உள்ளார். இதற்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் புடின் கூறியதாவது: அமெரிக்காவின் அமைதி திட்டம் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எதிர்கால ஒப்பந்தமாக மாறக்கூடும். இது தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. உக்ரைன் படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை விட்டு வெளியேறினால், நாங்கள் போர் நடவடிக்கைகளை நிறுத்துவோம். அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், நாங்கள் அதை ராணுவ நடவடிக்கை மூலம் அடைவோம். உக்ரைனின் சட்டவிரோத தலைமையுடன் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திடுவது அர்த்தமற்றது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்தபோது தேர்தலை நடத்த மறுத்ததால் உக்ரைன் தலைமை தனது சட்டப்பூர்வத் தன்மையை இழந்தது. இவ்வாறு புடின் கூறினார்.

















