
திருவண்ணாமலை: டிசம்பர் 1-திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் 7-ம் நாள் உற்சவமான நேற்று மகா தேரோட்டம் கோலாகரமாக நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், ராஜகோபுரம் எதிரே உள்ள அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அவர்களுக்குரிய ரதங்களில் எழுந்தருளினர்.
அதைத்தொடர்ந்து பஞ்சரதங்கள் வீதியுலாவின் தொடக்கத்தில் முதலாவதாக விநாயகர் தேர் காலை 7.10 மணிக்குப் புறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். பின்னர் காலை 11 மணி அளவில் முருகர் தேர் புறப்பட்டது. இதில் வள்ளி தெய்வானை சமேத முருகர் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து சுவாமி தேர் என அழைக்கப்படும் மகா ரதம் மாலை 4 மணிக்குத் தொடங்கியது. அப்போது மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு ‘அரோகரா’ என பக்தி முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மகா ரதத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், வேலூர் சரக டிஐஜி தர்மராஜ், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.மாடவீதிகளில் வலம் வந்த மகாரதம் இரவு 10.30 மணி அளவில் நிலைக்கு வந்தது. அதன்பின்னர், 11 மணி அளவில் பராசக்தி அம்மன் அலங்காரரூபத்தில் எழுந்தருளி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. அம்மன் தேரை தேரோட்டத்தின் மரபின்படி பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நிறைவாக சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது.
இதன்படி விடிய விடிய வீதியுலா நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணி்யில் ஈடுபட்டனர்.
திருவிழாவின் 8-ம் நாள் உற்சவமான இன்று காலை வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், குதிரை வாகனத்தில் சந்திரசேகரர் பவனி மற்றும்.
மாலை 4 மணிக்கு தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவர் உற்சவம் நடைபெறுகிறது. இரவு பெரிய குதிரை வாகனத்தில் அம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருள்கிறார்.





















