
புதுடெல்லி: டிசம்பர் 2-
பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் திங்கட்கிழமை தொலைபேசி வழியாக உரையாடினார். அப்போது டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு இந்தியா உதவும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளது.இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், “இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்கவுடன் உரையாடினேன். ‘டிட்வா புயல்’ காரணமாக பரவலாக ஏற்பட்ட பேரழிவுக்காகவும் துயர்மிக்க உயிரிழப்புகளுக்காகவும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தேன். இந்த கடினமான நேரத்தில் மிகவும் நம்பகமான நண்பனாக இந்தியா இலங்கையுடனும், அந்நாட்டு மக்களுடனும் உறுதுணையாக நிற்கின்றது.தற்போது முன்னெடுக்கப்படும் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் இந்தியா தொடர்ந்து வழங்கும். அதேவேளையில் இலங்கை முன்னெடுக்கும் மீட்சி நடவடிக்கைகளுக்கு இந்தியா துணைநிற்கும்” என்றார்.வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மோசமான பேரிடராக மாறியிருக்கிறது. அந்நாட்டின் பெரும் பகுதியைச் சூறையாடிய இந்தப் புயலின் கோரத் தாண்டவம், மிகப் பெரிய உயிர்ச்சேதத்தையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி, மக்களை மீளாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.















