ஹெச்1பி விசா; இந்தியர்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு

புதுடெல்லி: டிசம்பர் 10-
ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பித்துள்ள இந்தியர்களுக்கான நேர்காணலை அமெரிக்க தூதரகம் அடுத்தாண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
வெளிநாட்டவர்களால் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கூறி, அமெரிக்காவிற்கு குடிபெயர விரும்பும் பிற நாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக்கினார். அந்த வகையில், அமெரிக்காவில் தங்கி பணி புரியவும், கல்வி பயில்வதற்குமான ஹெச் 1பி விசா கட்டணத்தை 89 லட்சம் ரூபாயாக அதிகரித்து உத்தரவிட்டிருந்தார். மேலும், ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளையும் கடுமையாக்கப்பட்டது.
ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணலை அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 2வது வாரம் முதல் இம்மாத இறுதி வரையில் நேர்காணலில் பங்கேற்க இருந்தவர்களுக்கு, 2026ம் ஆண்டு மார்ச் மாதம் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் சமூகவலைதள கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எதிராகவோ, பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாகவோ கருத்துக்கள் பதிவிட்டிருந்தாலோ, ஆதரவு தெரிவித்திருந்தாலோ, அவர்களின் விசாக்கள் நிராகரிக்கப்படும். அண்மையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, 19 நாடுகளுக்கான விசா மற்றும் க்ரீன் கார்டு உள்ளிட்ட விண்ணப்பங்களை அமெரிக்க நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.