
கோல்கட்டா: டிசம்பர் 13-
கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 70 அடி உயர தனது உருவச்சிலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. இதையடுத்து, ‘இந்தியா டூர் 2025’ என்ற திட்டத்தின் படி, மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வந்தார் மெஸ்ஸி. நீண்ட கால கிளப் அணி நண்பர், உருகுவேயின் லுாயிஸ் சாரஸ், அர்ஜென்டினா அணி மத்தியகள வீரர் ரோட்ரிகோ டி பால் என மூன்று பேர், இவருடன் வந்தனர்.
இந்நிலையில் இன்று (டிச.,13) காலை 10.30 மணிக்கு கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 70 அடி உயர தனது உருவச்சிலையை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார். மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
முன்னதாக, இன்று அதிகாலை கோல்கட்டா விமான நிலையத்தில், கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று மதியம் 2:00 மணிக்கு மெஸ்ஸி ஐதராபாத் செல்கிறார். நட்பு போட்டி ரத்தானதால், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உள்ளிட்ட தலா 7 பேர் பங்கேற்கும் காட்சி போட்டியில் விளையாடுகிறார்.
இரண்டாவது நாள் நாளை மும்பை செல்கிறார். மாலை 5:00 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இரவில் 45 நிமிடம் ‘பேஷன்’ நிகழ்வு நடக்கும். இதில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மூன்றாவது நாள் நாளை மறுநாள் (டிச. 15), டில்லி செல்லும் மெஸ்ஸி, பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்கிறார்.
















