அகமதாபாத்: டிசம்பர் 24-
குஜராத் மாநிலத்தில் 1960-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. ஆனால், குஜராத்துக்கு வெளியே இருந்து வரும் நபர்கள் உரிமம் பெற்று மது அருந்தலாம்.
இந்நிலையில் காந்தி நகரில் உள்ள கிப்ட் சிட்டியில் மது அருந்துவதற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிப்ட் சிட்டியில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு உலகளாவிய வணிக சூழல் அமைப்பை வழங்கும் நோக்கில், கிப்ட் சிட்டி பகுதி முழுவதற்கும் ‘ஒயின் மற்றும் டைன்’ வசதிகளை வழங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி கிப்ட் சிட்டியில் அமைந்துள்ள ஓட்டல்களில் குஜராத்துக்கு வெளியில் இருந்து வரும் நபர்களும், இந்தியாவைத் தவிர வேறு நாடுகளில் இருந்து வரும் நபர்களும் மது அருந்த முடியும். அவர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையைக் காட்டி அதற்கேற்ப மது வகைகளை பெற்றுக் கொள்ளலாம்.















