
கம்போடியா:டிசம்பர் 25-
உலகளவில் உணர்வுகளை புண்படுத்துகிறது என கம்போடியாவில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கம்போடியாவுடன் எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில் தாய்லாந்து ராணுவ வீரர்கள் கம்போடிய பகுதியில் இருந்த விஷ்ணு சிலையை இடித்து அகற்றியது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. 29 அடி உயரமான இந்த விஷ்ணு சிலையை தாய்லாந்து ராணுவத்தினர் இடித்து அகற்றிய சம்பவம் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: தற்போது நடைபெற்று வரும் தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில், சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு ஹிந்து மத தெய்வச் சிலை இடிக்கப்பட்டது குறித்த செய்திகளை நாங்கள் கவனித்தோம். இந்த கோவிலில் உள்ள ஹிந்து சிலை நாகரிகப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதி முழுவதும் உள்ள மக்களால் ஆழ்ந்த பக்தியுடன் போற்றி வணங்கப்படுகிறது.
பிரதேச உரிமைக் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இதுபோன்ற அவமரியாதையான செயல்கள் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றன, மேலும் இவை நடக்கக்கூடாது.இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிக்குத் திரும்பி, அமைதியை மீட்டெடுக்கவும், மேலும் உயிர் இழப்புகள் மற்றும் சொத்துக்களுக்கும் பாரம்பரியச் சின்னங்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கவும் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
















