பாகிஸ்தான் வீரர் செய்த அதிர்ச்சி செயல்.. விக்கெட்டை தாரை வார்த்த சம்பவம்

ஹராரே, ஜன. 17- கிரிக்கெட் மைதானத்தில் எத்தனையோ விசித்திரமான அவுட்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் அண்டர் 19உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் அவுட் ஆன விதத்தைப் பார்த்தால், “சிரிப்பதா அல்லது அழுவதா?” என்றே தெரியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான குரூப் போட்டியில், பாகிஸ்தான் வீரர் அலி ரசா செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஹராரேவில் நடந்த இப்போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 211 ரன்கள் என்ற இலக்கை நோக்கிப் பாகிஸ்தான் அணி ஆடிக்கொண்டிருந்தது. கேப்டன் ஃபர்ஹான் யூசுப் 65 ரன் குவித்து போராடி ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 173 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. கடைசி விக்கெட்டிற்கு மோமின் கமர் மற்றும் அலி ரசா ஜோடி களத்தில் இருந்தது. ஆட்டத்தின் 47-வது ஓவரில் பீல்டர் எறிந்த பந்து விக்கெட் கீப்பரை நோக்கி வந்தது. அப்போது நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருந்த அலி ரசா, ரன் ஓடும் எண்ணமே இல்லாமல், ஏதோ பார்க்கச் சென்றவர் போல் அசால்ட்டாக கிரீஸை விட்டு வெளியே வந்தார். பந்து தன் மீது பட்டுவிடக்கூடாது என்று விலகினாரா அல்லது ஆட்டத்தின் நினைவே இல்லாமல் இருந்தாரா என்று தெரியவில்லை. இதை கவனித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் தாமஸ் ரீவ் சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் பந்தைப் பிடித்து ஸ்டம்பை தகர்த்தார். ரீப்ளேவில் பார்க்கும்போது, அலி ரசா கிரீஸை விட்டு வெளியே நின்றது தெளிவாகத் தெரிந்தது. விக்கெட் கீப்பர் அடிப்பதைப் பார்த்தும் அவர் உள்ளே வர முயற்சிக்கவே இல்லை. ஏதோ எதிரணிக்கு விக்கெட்டைப் பரிசாகக் கொடுப்பது போல, அவர் நடந்துகொண்ட விதம் வர்ணனையாளர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.