
வதோதரா, ஜன. 21- மகளிர் பிரீமியர் லீக் (WPL 2026) தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது டெல்லி அணி. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டெல்லி வீராங்கனை மரிசான் கேப் வீசிய பந்துகளில் ரன் எடுக்க முடியாமல் மும்பை பேட்டர்கள் திணறினர். தனது 4 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட கொடுக்காமல், வெறும் 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மிரட்டினார் கேப். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 41 ரன்கள் சேர்த்தார். ஹர்மன்பிரீத் மற்றும் நாட் சாய்வர் பிரண்ட் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய சாய்வர் பிரண்ட், 45 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 66 ரன்களைக் குவித்தார். இதன் மூலம் WPL தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த மெக் லானிங் சாதனையை (11 அரைசதங்கள்) அவர் சமன் செய்தார். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் எடுத்தது. 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு ஷபாலி வர்மா மற்றும் லிசெல்லி லீ அதிரடித் துவக்கம் தந்தனர். சிறப்பாக விளையாடி வந்த லிசெல்லி லீ 46 ரன்கள் எடுத்த நிலையில் சர்ச்சைக்குரிய முறையில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இதற்கிடையே, ஷபாலி வர்மா மகளிர் பிரீமியர் லீக் தொடரில் 1000 ரன்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டினார். அணியின் வெற்றிக்கு பொறுப்பான ஆட்டம் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் களத்தில் நங்கூரம் போல நிலைத்து நின்றார். விக்கெட்டுகள் விழுந்தாலும் பதற்றமடையாமல் விளையாடிய அவர், 51* ரன்கள் குவித்து 19 ஓவர்களிலேயே அணியை வெற்றி பெறச் செய்தார். இந்தப் போட்டியில் வேறு இரண்டு சாதனைகளும் நிகழ்ந்தன. டெல்லி அணிக்காக 16 வயதில் களமிறங்கிய தியா யாதவ், மகளிர் பிரீமியர் லீக் வரலாற்றில் விளையாடிய மிக இளம் வயது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.


















