சேலம் ஜனவரி 30-
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுக-வில் இணையும் நிகழ்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுக-வில் பலரும் சேர்ந்து வருகின்றனர். அதிமுக-வின் வெற்றி பிரகாசமாக உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படி ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதிமுக-வுக்கு துரோகம் இழைத்தவர் என்பதால் பொதுக்குழு கூடி முடிவெடுத்து, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பதால் மீண்டும் அவரை கட்சிக்குள் இணைக்க வாய்ப்பில்லை. அது, 2,500-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி எடுத்த நடவடிக்கை; பொதுச்செயலாளர் எடுத்த நடவடிக்கை இல்லை. வரும் தேர்தலில் அதிமுக தான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.
இன்னும் பல கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வாய்ப்பிருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி இறுதி செய்யப்பட்டவுடன் முறையாக அறிவிப்போம். யாருக்கு எத்தனை சீட், எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
திமுக அரசை அகற்ற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் மக்களுக்கானதாக இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் தினம்தோறும் போட்டோ ஷூட் மட்டும் நடக்கிறது. அத்துடன் அது முடிந்து விடுகிறது. திட்டங்களை நிறைவேற்ற 52 குழுக்களை போட்ட நிலையில், வெள்ளை அறிக்கை கேட்டால் விளக்கம் இல்லை. வெற்று அறிவிப்புகளை விட்டு கவர்ச்சிகரமாக திட்டங்களை அறிவித்து, மக்களை ஏமாற்றி ஊழல் அரசாக திமுக அரசு உள்ளது. திமுக அரசில் ரூ.4 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்.
2026-2027 நிதியாண்டுக்கான திட்டங்களுக்கு சட்டப்பேரவை ஒப்புதல் பெறாமல் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். விதிகளை மீறி முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேடுகளை எவ்வித அச்சமும் இல்லாமல் செய்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விதிமுறைக்கு முரணாக விடப்பட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்படும். நிரந்தர டிஜிபி-யைக் கூட நியமிக்காமல் பொறுப்பற்ற அரசாக திமுக அரசு உள்ளது.















