
சென்னை: பிப்ரவரி 3-
தமிழக வெற்றிக் கழகத்தின் தொடக்க விழாவில் முருகன் பாடலை அவமதித்ததாக பாடகர் வேல்முருகன் மீது நெல்லை வழக்கறிஞர் குற்றாலநாதன் புகார் அளித்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது.
தவெகவின் 3ஆவது ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் கலந்து கொண்டு பாடல்களை பாடினார்.அவர் பாடுகையில் “கொடியவரின் கொடியவரில் கதையெல்லாம் முடிச்சிடவே, கொள்ளையடிச்ச கூட்டங்களை கூண்டோடு ஒழிச்சிடவே, வரியோரின் அறிவோரின் வாழ்க்கைகெல்லாம், வலியோரின் வலியோரின் வாழ்க்கையெல்லாம் மாற்றிடவே, எங்க மூன்றெழுத்து வரலாற்றை திருப்பிதான் போட்டிடவே, தவெக எனும் மூன்றெழுத்து வரலாற்றை திருப்பிதான் போட்டிடவே, தமிழக வெற்றிக் கழகம் தலை நிமிர்ந்து வருகிறது பாரு” என்ற பாடலை பாடியிருந்தார். அது போல் விஜய்யை முருகன் என்று வர்ணித்து வேல்முருகன் பாடியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் கடந்த 1 ஆம் தேதி தைப்பூசம் நடந்த நிலையில் இன்றுதான் (நேற்று) உண்மையான தைப்பூசம் என வேல்முருகன், விஜய்யை பாராட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தவெக தொடக்க விழாவில் முருகன் பாடலை அவமதித்ததாக பாடகர் வேல்முருகன் மீது நெல்லை வழக்கறிஞர் குற்றாலநாதன் புகார் அளித்துள்ளார். வேல்முருகன் முதல் முறையாக ஜேம்ஸ் வசந்தனால் “மதுர குலுங்க” என்ற பாடலில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து அவர் ஏராளமான நாட்டுப்புற பாடல்களை கணீர் குரலால் பாடியுள்ளார். இந்த நிலையில் ஏற்கெனவே வேல்முருகன், மெட்ரோ ஊழியரை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு வளசரவாக்கம் – ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், மெட்ரோ ஊழியர்களும், அங்கே இரவு நேரங்களில் தடுப்பு அமைத்து ஒருவழிப் பாதையாக மாற்றியிருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டு சம்பவம் நடந்த தினத்தன்று இரவு 11 மணிக்கு பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் தன்னுடைய காரில் அந்த வழியாக சென்றுள்ளார். விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் சிக்னல் அருகே பேரிகாட் போட்டு ஒருவழிப்பதையாக மாற்றப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.















