
கோத்தகிரி: பிப்ரவரி 16-
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் தலைவரும், விண்வெளி ஆணையத்தின் உறுப்பினருமான ஏ.எஸ். கிரன்குமார் பேசியதாவது: நம் நாட்டில் விண்வெளி தொழில்நுட்பத்தை ஒளிபரப்பு, தொலைத்தொடர்பு, வானிலை கண்காணிப்பு, திசை அறிதல், வியூகப் பயன்பாடு உட்பட்ட தேவைகளுக்கு தொடக்க காலத்தில் பயன்படுத்தினோம்.
அதனைத் தொடர்ந்து வானிலை ஆய்வு மூலம் பல்வேறு துறைகளுக்கு தகவல் அளித்து, பயிர் விளைச்சல், வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
அண்மைக் காலங்களில் எல்லை தாண்டி என்ன நடக்கிறது என்கிற தகவல்களை இந்திய அரசுக்கு வழங்க விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. செயற்கைக்கோள்களை தொடர்ந்து விண்ணில் செலுத்தி, பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்று வருகிறோம்.
தற்போது விண்வெளி தொழில்நுட்பத்தில் பிற நாடுகளுக்கு இணையாக நம் நாடு வளர்ந்துள்ள நிலையில், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் வின்வெளி பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஐஐடி மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வானியல், விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான கல்வியை அளித்து வருகின்றன. திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே நமது நாட்டை உலகம் அங்கீகரிக்கும். அந்த வகையில் ராணுவம் உள்ளிட்ட துறைகளில் தற்சார்பு நிலையை அடைய இந்தியா முனைப்பு காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
















