
புவனேஸ்வர்: பிப்ரவரி 16-
ஒடிசாவில், அங்கன்வாடி மையத்தில் சமையலராகப் பணியமர்த்தப்பட்ட தலித் பெண்ணுக்கு எதிராக கிராம மக்களின் சமூகப் புறக்கணிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுவாகோன் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது பட்டதாரிப் பெண் சர்மிஸ்தா சேத்தி. அரசு வேலை பெற்று, உள்ளூர் அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து தேர்வானார். ஆனால், அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் உண்ணக் கூடாது எனக்கூறி மற்ற பிரிவினர் கடந்த நான்கு மாதங்களாக குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்து வருகின்றனர்.
இது குறித்து சர்மிஸ்தா கூறுகையில், “நான் பணியில் சேர்ந்த நாள் முதல் கிராம மக்கள் எங்களை ஒதுக்கி வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு மையத்திற்குச் சென்று, பெருக்கி சுத்தம் செய்துவிட்டு குழந்தைகளுக்காகக் காத்திருக்கிறேன். ஆனால் தலித் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளைத் தவிர வேறு யாரும் வருவதில்லை. அங்கன்வாடி மூலம் வழங்கப்படும் சத்துணவுப் பொருட்களைக் கூட வாங்க மறுக்கின்றனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.
இந்தச் சிக்கலைத் தீர்க்க மாவட்டத் துணை ஆட்சியர் அருண் குமார் நாயக் தலைமையில் அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டது. கிராம மக்களின் மனப்போக்கை மாற்றும் முயற்சியாக, அந்தப் பெண் சமைத்த உணவை அதிகாரிகளே உண்டு காண்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். எனினும், கிராம மக்கள் தங்களது பிடிவாதத்தைக் கைவிடாவிட்டால் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் பட்டப்படிப்பு முடித்த ஒரு இளம்பெண், தனது சொந்த ஊரிலேயே சாதியப் பாகுபாட்டால் புறக்கணிக்கப்படுவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.















