
புதுடெல்லி: பிப்ரவரி 26-
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேலுக்கு சென்றார். அவரை பென்குரியன் விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேரில் வரவேற்றார்.
பின்னர் ஜெருசலேமுக்கு சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடிக்கு நெசெட் சபாநாயகர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மோடிக்கு இஸ்ரேல் பாராளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா அணிவித்தார். ஜெருசலேமில் நடந்த தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்காட்சியில் மோடியும், நெதன்யாகுவும் கலந்து கொண்டு பார்வையிட்டனர். கண்காட்சிக்கு செல்வதற்கு இரு தலை வர்களும் ஒரே காரில் பயணம் செய்தனர். இஸ்ரேல் பயணத்தில் தனது 2-ம் நாளான இன்று பிரதமர் மோடி மதியம் யாத் வாஷேம் பகுதிக்கு சென்று அங்கு, நாஜிக்களால் கொல்லப்பட்ட யூதர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
இதைத்தொடர்ந்து இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கை சந்தித்து இரு தரப்பு பேச்சு நடத்துகிறார். அதன்பின் பிற்பகல் 2.40 மணிக்கு பிரதமர் மோடியும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யா குவும் தூதுக்குழுமட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார ஈடுபாடு, புதுமை, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கிறார்கள். இந்தியாவின் உள்நாட்டு வான் பாதுகாப்பு கேடயமான சுதர்சன் சக்ரா அமைப்புக்கு இஸ்ரேலின் அயன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பின் தொழில்நுட்பத்தை இந்தியா பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேக் இன் இந்தியா முயற்சியின் கீழ் இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க இஸ்ரேல் முன்வந்துள்ளது. இது தொடர்பாக இரு தலைவர்களின் சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும் எதிரி ஆயுதங்களுக்கு எதிராக ‘ஒளி-வேக’, செலவு குறைந்த பாதுகாப்பை வழங்கும் இஸ்ரேலின் புதிய அயன் பீம் லேசர் அமைப்பை இந்தியா வாங்க விரும்புகிறது. இது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த சந்திப்பில் இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. பேச்சுவார்த்தைக்கு பின் இரு தலைவர்களும் கூட்டு அறிக்கை வெளியிடுகிறார்கள்.














