
பெய்ரூட்: மார்ச் 2-
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் புறநகர் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதை அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, லெபனான் புரட்சி படையான ஹிஸ்புல்லா, ஈரான் உச்ச தலைவர் கமேனி மரணத்தை அடுத்து இஸ்ரேல் மீது ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்தார்.
இதையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. எண்ணெய் கப்பல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. விமான சேவையும் மத்திய கிழக்கு பகுதியில் முடங்கி உள்ளது. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர்கள் கமேனி உள்பட ஈரானை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்: ஈரான் உச்ச தலைவர் கமேனி மரணத்துக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதில் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன என ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் முதல் முறையாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் மேற்கொண்டதாக கூறியுள்ளது. இருப்பினும் அதை தங்கள் நாட்டு வான் பாதுகாப்பு கவச அமைப்பு இடைமறித்து அழித்தாகவும், இதில் யாருக்கும் காயமோ அல்லது உடைமை சேதமோ ஏற்படவில்லை.
எல்லை பகுதியில் சில குண்டுகள் திறந்தவெளி பகுதியில் விழுந்தன என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா தாக்குதலை தொடர்ந்து பெய்ரூட் மீது வான்வழி தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது. திங்கட்கிழமை அன்று எல்லை பகுதியில் இருந்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், லெபனானில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நகரங்களை சேர்ந்த மக்கள், அந்த பகுதியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வெளியேறிச் செல்லுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்.















