Home மாவட்டங்கள் பெங்களூர் விஜய் ஒரே நாளில் 5 இடங்களில் பிரச்சாரம்

விஜய் ஒரே நாளில் 5 இடங்களில் பிரச்சாரம்

சென்னை: மார்ச் 26 –
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இந்த தேர்தலில் புதிய கட்சியாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரம்பூரில் முதன் முதலாக பிரச்சாரத்தை தொடங்கும் விஜய் அன்று மட்டும் 5 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ஆம் தேதி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெற்று, அதே நாளில் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கனவே தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன.
கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் வெளியீடு மற்றும் பொதுக்கூட்டங்கள் போன்ற பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாக களம் காணும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படுகின்றன. தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அந்த கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இருப்பினும், அக்கட்சித் தலைவர் விஜய் வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியில் இருந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. பெரம்பூர் தொகுதி அரசியல் ரீதியாக முக்கியமான பகுதியாக கருதப்படுவதால், அங்கு விஜய் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மார்ச் 27-ஆம் தேதி மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தில் கட்சியின் வேட்பாளர்கள் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு, தவெக தலைவர் விஜய் முக்கிய உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த கூட்டம் கட்சிக்கு முக்கிய தொடக்க நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தேர்தல் பிரசாரத்தை நாளை மறுநாள் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பெரம்பூர் தொகுதியை மையமாகக் கொண்டு தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்க உள்ளார். 5 இடங்களில் பிரசாரம் தொடர்ந்து வடசென்னையின் முக்கிய தொகுதிகளான கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் விஜய் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஐந்து தொகுதிகளிலும் நடைபெறும் பிரசார கூட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் சுமார் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.