
சென்னை: மார்ச் 27 –
சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30- முதல் தொடங்கவுள்ளது. தேர்தலுக்கு குறைந்த கால அவகாசமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதில் தவெக, நாம் தமிழர் ஆகியவை தனித்து களமிறங்க, திமுக, அதிமுக கூட்டணி பலத்துடன் போட்டியிட உள்ளன.
இந்நிலையில் ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மேலும், அதிமுகவின் 23 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலையும் பழனிசாமி நேற்று முன்தினம் வெளியிட்டார். அதன்படி சேலம் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி மீண்டும் போட்டியிடுகிறார்.இதையடுத்து மீதமுள்ள 146 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மூத்த தலைவர்களுடன் பழனிசாமி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.வேட்பாளர் தேர்வில் ஜெயலலிதா பாணி இருக்க வேண்டும் என்பதற்காக கடைக்கோடி தொண்டர்கள், சமூக பிரதிநிதித்துவம், பாலின பிரதிநிதித்துவம், புதிய முகங்கள், தேர்தல் செலவுகளை சமாளிக்கும் நிதி வலிமை உள்ளோருக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும், அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் விதமாக வேட்பாளர் தேர்வு இருக்கும் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.


















