Home செய்திகள் தேசிய செய்திகள் மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் தாக்குதலை கண்டித்து தொடரும் போராட்டம்

மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர் தாக்குதலை கண்டித்து தொடரும் போராட்டம்

இம்பால்: ஏப்ரல் 21 –
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இன்னும் குறையவில்லை. இந்நிலையில், கலவரக்காரர்களின் தாக்குதல் காரணமாக கொந்தளித்த மக்கள், தொடர் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.
ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள துரோங்லோபி கிராமத்தில் பி.எஸ்.எஃப் வீரர் ஒருவரின் இரண்டு குழந்தைகள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர். இது இந்த பகுதிகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்தக் கொலையைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 உள்ளூர்வாசிகள் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து மைதேயி அமைப்புகள் பள்ளத்தாக்கு பகுதிகளில் 5 நாள் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் நேற்று இரண்டாவது நாளாகக் கடைகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் முற்றிலும் முடங்கின. மணிப்பூரில் உள்ள மூன்று முக்கிய இனக்குழுக்களும் தனித்தனியாகப் போராட்டங்களை அறிவித்துள்ளன, இது சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. நாகா சமூகத்தினர், தங்கள் சமூகத்தை சேர்ந்த 2 பேர் சமீபத்தில் கொல்லப்பட்டதை கண்டித்து, நேற்று நள்ளிரவு முதல் நாகா பகுதிகளில் 3 நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தற்போதைய கள நிலவரம் இம்பால் உள்ளிட்ட பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டுள்ளது. கூட்டத்தைக் கலைக்கக் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடியடி நடத்தப்பட்டதில் பெண்கள் உட்படப் பலர் காயமடைந்துள்ளனர்.
முதல்வர் யும்னம் கெம்சந்த் சிங், கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். போராட்டத்தை முன்னெடுக்கும் கூட்டு நடவடிக்கைக் குழுவின் கோரிக்கைகளை அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.